Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார் 300 – 350 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நடுத்த வருமானம் பெறும், வருமானம் குறைந்த மக்களுக்காக 5 வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடன் எதுவும் இன்றி முற்று முழுதாக சீனாவின் நிதி உதவியின் கீழ் கொழும்பிற்குள் இந்த வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பெருமளவான மக்களுக்கு வீடுகளை வழங்க முடியும் என்று நம்புகின்றோம்.

இதன் மூலம் 2500 வீடுகளை கட்டம் கட்டமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் சன நெறிசல் மிக்க பகுதிகள் உள்ளடங்களாக ஏனைய பகுதிகளில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான காணிகளை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நிதியுதவிகள் கட்டம் கட்டமாகவே கிடைக்கவுள்ளன. அதற்கமைய முதற்கட்டமாக 200 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்துக்கு 300 – 350 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
Tags

ads