கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பினை தடுக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணிகளுக்கான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு மற்றுமொரு பலன் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான பணம் (ரூபா 10,030,000 ) அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஜனாதிபதி அலுவலகம் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளது. அதற்கமைவாக அடுத்தகட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் முன்னெடுத்துவருகின்றார்.
எனவே குறித்த பணமானது நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான தொடர் முயற்சிகளுக்கு மிகவும் அவசியமானது என்பதனால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சார்பிலும் , நிந்தவூர் வாழ் பொதுமக்கள் சார்பிலும் இச் செயற்பாட்டிற்கு வழிவகுத்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் மற்றும் தொடர் ஆதரவினை வழங்கிவரும் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.