Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சினிமாவில் இருந்து விலகும் விஜய்.கோலிவுட்டுக்கு இத்தனை கோடி நஷ்டமா..?


 சென்னை: விஜய் தற்போது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் GOAT ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடைசியாக ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார்.


விஜய் முடிவால் இத்தனை கோடி நஷ்டமா..? இதனால் சினிமாவில் விஜய்யின் வெற்றிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுக்குப் பின்னர் அதிக ரசிகர்களை கொண்ட ஹீரோ விஜய் தான். முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.


எந்த இயக்குநராக இருந்தாலும் சரி, விஜய் ஹீரோ என்றால் அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது. அதேபோல், ஓடிடியிலும் லியோ பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் GOAT படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகி வருகிறது. அதனால் இந்தப் படமும் பல நூறு கோடிகளை வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார். இதனால் கோலிவுட்டே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதேநேரம் இனி முழுமையாக அரசியலில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார். GOAT ஷூட்டிங் முடிந்ததும் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளார். பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச் வினோத் அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தளபதி 69 தான் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகவுள்ளது. விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திரையுலகத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


அதாவது விஜய் படங்கள் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், ஓடிடி ரைட்ஸ், விஜய் படங்களுக்கான விளம்பரங்கள், ப்ரோமோஷன்கள் என பல வழிகளிலும் 1000 கோடி ரூபாய் பிஸினஸ் நடைபெறுகிறதாம். கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். இப்போது அவரும் நடிப்பதை நிறுத்திவிட்டால் கோலிவுட்டுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர். ரஜினி, கமல் இருவருமே சீனியர் நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்டனர். இதனால் விஜய்க்குப் பின்னர் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். இவர்களில் அஜித் படங்களுக்கு மட்டுமே பெரியளவில் ஓபனிங் கிடைக்கும், ஆனாலும் அவர் ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயம். இதனால் விஜய்யின் வெற்றிடத்தை நிரப்ப இப்போதைக்கு யாரும் இல்லை என்பதே உண்மை.

ads