சபாநாயகருக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் எம்.பி!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சான்றுரைத்த குற்றச்சாட்டுக்காக சபாநாயகருக்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படக்கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட மா அதிபர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட நால்வர் பொறுப்பு கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்பாராத நிகழ்வுகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தில் பல எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள். அமைச்சர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் கவலையளிக்கின்றன.
சபாநாயகருக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தொடர்பில், சட்ட மா அதிபர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் சபாநாயகருக்கு அறிவுறுத்தல்களை வழங்க முடியும்.
இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக செய்யக்கூடிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆலோசனைகளை வழங்கியிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது.
இணையவழி பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற முன்னர், சபாநாயகர் கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்தியிருக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக இருந்தது இதுதான். ஒரு சட்டத்துக்கு எதிராக முதல்துறையாக இலங்கையில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எனினும், இதனை பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை நாடாளுமன்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இணையவழி பாதுகாப்பு சட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், தற்போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்காது“ என தெரிவித்தார்.