நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுவின் விசேட கூட்டம்!
நமது பிராந்தியத்தில் கடந்த ஒரு வாரமாக எதிர்நோக்கி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர் . வெள்ளநீர் வழிந்தோடாமைக்கான காரணமாக, குடியிருப்பு காணிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது பற்றி சுட்டி காட்டப்பட்டது.
வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் குறித்தும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போது செய்ய வேண்டிய முன் ஆயத்தத் திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
விவசாயிகளின் வயல் காணிகளின் அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இவ்வரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமையும். கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக மாற்றம் வேண்டியே இவ் அரசாங்கத்திற்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.
மேலும் இந்த ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படல் அவசியமாகும்.
சிறந்த ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமாயின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . சிக்கனமான முறையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அப்போது தான் ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியும் என்றார்.
தனது வேண்டுகோளையேற்று, நிந்தவூர் பிரதான வீதி ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்தது. இப்பாலத்தை போக்குவரத்துக்கு விரைந்து தற்காலிக நடவடிக்கைகளை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியியலாளர் அலியார் அவர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையை நிவர்த்தி செய்வதற்காக தற்காலிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கறைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களுக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் சபையினர் முன்னிலையில் நன்றிகளை தெரிவித்திருந்தார்.
@CM