குருணாகல், தோரயாய பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதன் காரணத்தினாலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், மூத்த காவல்துறை அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று தோரயாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாதுறு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று குறித்த பேருந்தின்மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 28 பேர் குருணாகல் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குருணாகல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.
@CM