கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 4,74,147 பேர் விண்ணப்பித்துள்ள தாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேற்படி விண்ணப்பதாரர்களின் 3,98,182 விண்ணப்பதாதிகள் பாடசாலை மட்டத்திலும் 75 ஆயிரத்து 968 விண்ணப்பதாரிகள் தனியாகவும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பரீட்சாத்திகள் நாளை காலை உரிய நேரத்திற்கு முன்பதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறும் தேவையான உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்வதுடன் தேவையற்ற உபகரணங்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அவர் விஷேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரீட்சைகளுக்கான விதிமுறைகளை மீறி எவராவது செயற்பட்டால் அது பரீட்சை குற்றமாக கவனத்திற் கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைக்கான தடை விதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நாடளாவிய ரீதியில் 3663 பரீட்சை நிலையங்களில் நாளை பரீட்சை நடைபெற வுள்ளன. குறிப்பாக வடக்கிலும் மாணவர்கள் இலகுவாக பரீட்சைக்கு தோற்றும் விதத்தில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் இரத்மலானை, தங்கல்ல, மாத்தறை, சிலாபம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு மெகசின் சிறைச்சாலை, வட்டரக்க சுனீத வித்தியாலயம் ஆகியவற்றில் சிறைக் கைதிகளுக்காகவும் புனர்வாழ்வு பெற்று வரும் மாணவர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்காக பரீட்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
@CM