Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

குழந்தைகளின் இதயத்தைக் காப்பாற்றப் போகும் உலகின் மிகச் சிறிய pacemaker கண்டுபிடிப்பு!


அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய இதய முடுக்கி (Pacemaker) எனப்படும் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.


மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை விட சிறியது எனவும், இது உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்குள் சென்றுவிடக் கூடியது எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனை மார்பு பகுதியில் தோலுக்கு அடியில் பொருத்துவதாகவும், இது ஈய கம்பிகள் மூலம் இதயத்துக்குத் தொடர்ந்து மின் தூண்டல்களை வழங்கி, அது சீராகத் துடிப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ஒழுங்கற்ற அல்லது மெதுவான இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு முக்கியமாகக் கருதப்படும் இந்தக் கருவி, குறைவான இதயத்துடிப்பு, இதய அடைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்காவின் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் கருவியே உலகில் மிகச் சிறியது எனக் கூறுகின்றனர்.


இந்த சிறிய கருவியைத் தற்காலிகமாக இதயத் துடிப்பு தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த கருவியை உருவாக்கும் குழுவின் தலைவரான உயிரி மின்னணுவியலின் (bioelectronics) முன்னோடி ஜான் ஏ ரோஜர், இது இதய பிரச்சினைகளுடன் பிறக்கும் 1% குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.


7 நாட்களில் குழந்தைகளின் இதயம் தானாகச் சரியாகிவிடும் எனத் தெரிவித்த அவர், அதுவரை இதனைப் பொருத்திக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கு இதய சிகிச்சைகளின்போதும் இதைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


இதயத்தில் மட்டுமல்லாமல் நரம்பு, எலும்பு மற்றும் வலியைக் குணப்படுத்துவதிலும் இதைப் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


@CM

Tags

ads