கடலரிப்புக்கான_நிரந்தரத் தீர்வினை அடைவதற்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி, கடற்றொழில் மற்றும் துறைமுகங்கள்,கப்பல்துறை ஆகிய அமைச்சுக்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினை உடனடியாக அமையுங்கள்;
நேற்று (06) இடம்பெற்ற நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் சபைக்கு அழுத்தம்.
அஹ்ஸன் இப்றாஹீம்-
ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணத்திற்கு பின்னராக ஏற்பட்ட கடலரிப்பினால், கடற்றொழிலை பிரதான ஜீவனோபாயமாக கொண்டு வாழும் எமது பிராந்திய மக்களின் வாழ்க்கை நிலை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்ததாக மாறிவிட்டது.
கடலரிப்பினை தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை அரசும் மற்றும் திணைக்களங்களும் அவ்வப்போது செய்வது வழமை.
இவற்றிற்கு மாற்றமாக நிரந்தரத் தீர்வினை நோக்கிய நகர்வே எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் எனும் உயரிய நம்பிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம் அவர்கள் முன்னெடுத்துவரும் தொடர் செயற்பாடுகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினை அமைப்பதற்கான அழுத்தம் நிரந்தரத் தீர்வினை வேண்டி நிற்கும் மற்றுமொரு பிரதிபலிப்பாகும்.
மாளிகைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பின் வீரியம் அதிகரித்தமையை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (04) கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சகிதம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் கள விஜயம் மேற்கொண்டதோடு, பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலின் நிறைவாக கடலரிப்பின் வீரியம் காணப்படும் இடங்களில் ஜியோ பேக்குகளை இட்டு பாதிப்பினை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிரந்தரத் தீர்வுக்கான திட்டத்தினை தயார் செய்யுமாறும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் திரு துளசி தாசன் அவர்களை கேட்டுக்கொண்டார். அதற்கமைவாக நேற்று முதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நேற்று இடம்பெற்ற நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்கள் தனது கள விஜயத்தின் போதான மற்றும் முந்தைய புகைப்படங்களை காட்ச்சிப்படுத்தி சபைக்கு தற்போதைய நிலையை விளக்கியிருந்தார்.
பின்னர் கடலரிப்புக்கான நிரந்தரத் தீர்வினை அடைவதற்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி, கடற்றொழில் மற்றும் துறைமுகங்கள்,கப்பல்துறை ஆகிய அமைச்சுக்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினை உடனடியாக அமைக்குமாறும் சபையை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.