உலக நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று (14.11.2023) பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந் நடைபவனியில் கல்முனை பிராந்திய சுகாதார அத்தியட்சகர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இரத்தத்தில் சாதாரண அளவைவிட அதிகமாக குளுக்கோஸ் காணப்பட்டால் அது நீரிழிவு எனப்படும்.
தற்போது நீரிழிவு நோயின் தாக்கம் இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் அதிகரித்து வருகிறது. இந்நோயை முன்கூட்டியே இனங்கண்டு சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதை மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதைத் தெரிவித்து நோயின் அறிகுறி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடைமுறைகள், நீரிழிவு நோயாளிகளுக்கான சிபாரிசுசெய்யப்பட்ட உணவு வகைகள் எவை என்பது தொடர்பில் சிறந்த பிரசுரமொன்றும் இந்த நடைபவனியில் விநியோகிக்கப்பட்டன.
நிந்தவூர் மக்களின் சுகாதார நலன்களை பேணும்வகையில் மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிந்தவூர் சுகாதாரசேவை வைத்திய அதிகாரி அலுவலகமும், ஆதார வைத்தியசாலை நிர்வாகமும் பாராட்டப்படவேண்டியதாகும்.
(ஏ. ஷபாஅத் அஹமட் )