தேசிய இளைஞர் விருதுகள்- 2023 ற்கான அறிவிப்பாளர் போட்டியில், நிந்தவூர் கமு/ கமு/ அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் தரம் 13 உயிரியல் பிரிவைச் சேர்ந்த முகம்மட் றாபிஉ பாத்திமா ஷியாசத் மிப்றா என்ற மாணவி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று இவ்வருடத்திற்கான சிறந்த இளம் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட 15 தொடக்கம் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் நடாத்தப்படும் போட்டித் தொடரிலேயே தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்
இவர் மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2023/9/20ஆம் திகதி கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் சேவைகள் கலையகத்தில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியில் இலங்கையின் பிரபல ஊடகங்களின் இளம் அறிவிப்பாளர்களோடு போட்டியிட்டிருந்தார்.
அண்மையில் வெளியாகிய இதன் உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் இவ்வருடத்திற்கான சிறந்த இளம் அறிவிப்பாளருக்குரிய தேசிய விருதை இம்மாணவி தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இவ்வருடம் தமிழ் மொழி மூலம் இவ் இளைஞர் விருதைப் பெறும் ஒரே ஒரு பாடசாலை மாணவி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான விருது வழங்கல் நிகழ்வு 2023/ 11/29ஆம் திகதி மகரகம தேசிய இளைஞர் அரங்கில் இடம்பெற்றது.
இவ்விழாவின் போது தமிழ் மொழி மூலமான நிகழ்ச்சித் தொகுப்பின் அறிவிப்பை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.