ஒலுவில் பிரதேசமானது கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளமையும் அவற்றின் வழியே பாரிய பின்னடைவுகளை அடைந்துள்ளமையும் வலி தருகின்ற விடயமாக இருக்கின்ற போதிலும் அவற்றை அடுத்த தலைமுறை வெற்றிகொள்ள முனைப்புடன் செயற்படுவது ஆறுதலளிக்கின்றது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம் அவர்களின் நேற்றைய (2) ஒலுவில் பிரதேச விஜயத்தின் போது வைத்தியசாலையின் குறைகளையும், தங்களுக்குள்ள அதிருப்திகளையும் ஒலுவில் வாழ் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவரவே, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தலத்திலேயே உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்திருந்ததோடு வைத்தியசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கான கலந்துரையாடலாக இவ் விஜயம் மாற்றம் கண்டிருந்தமை நம்பிக்கை தரும் செயலாகவே பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
மேலும் ஒலுவில் பெரிய பள்ளிவாயலின் விஜயத்தின் போதான நிர்வாகிகள் சந்திப்பில் பள்ளிவாயலில் நெடுங்காலத் தேவையாக இருந்துவருகிற சுற்றுமதில் நிர்மாண பணிக்கு நிதி திரட்டல் தொடர்பான மணுவினை பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டதோடு, குறித்த விடயத்தின் பூரணத்திற்காக முயலுவதாகவும் நம்பிக்கையளித்திருந்தார்.
இந் நிலையில் ஒலுவில் பிராந்திய எதிர்கால சந்ததிகளின் உடல், உள, கல்வி மற்றும் திறன் விருத்தியில் நல்ல அடைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும், மக்கள் தனக்கு வழங்கிய ஆணைக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ள போதிலும், அவை முற்றுப் பெறுவதற்கு முன்னர் முகநூலில் இட்டு, புகழ் மாலைகளை சூடிக்கொள்ளும் பழக்கம் தனக்கில்லை என்றும், காரியம் முடியும் வரை அமைதி காக்க வேண்டுமென்றும், மேலும் தூர நோக்குச் சிந்தனையுடன் பயணப் படுதலின் புரிதலினையும் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விளக்கி இருந்தார்.