Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரில் அனைத்து தனியார் வகுப்புகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற முடியாது அதிரடி முடிவு!

 



அகதியா மற்றும் அறநெறி பாடசாலைகளின் வினைத்திறணை அதிகரித்தலும் மற்றும் குர்ஆன்  மதரஸாக்கள்,அரபுக் கல்லூரிகள் மேலும் தனியார் கல்வி நிலையங்களினுடைய  தரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் 


கடந்த 2023. 12 .07 ஆம் திகதி  நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற   பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக


அஹதியா பாடசாலைகள், குர்ஆன் மத்ரசாக்கள் , அரபுக் கல்லூரிகள் மற்றும் மேலதிக கல்வி நிறுவனங்களில் சிறுவர்களின உச்ச நலன் பேணப்படுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்களின்  தலைமையில் 2023.12.28 ஆம் திகதி  இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் சிரேஷ்ட பொது  சுகாதார பரிசோதகர், பிரதேச சபை செயலாளர், உலமாக்கள்,  நம்பிக்கையாளர் சபையினுடைய செயலாளர், உலமா சபையினுடைய செயலாளர், மதரஸாக்கள் மற்றும் அரபுக்  கல்லூரிகளினுடைய அதிபர்கள்,  மேலதிக கல்வி நிறுவனங்களினுடைய முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், அகில இலங்கை அகதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் உதவி தலைவர்,  கலாசார உத்தியோகத்தர் ஆகியோர்கள், சிறுவர் பெண்கள் பிரிவை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு


01. பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் முழு நேர, பகுதி நேர மதரசாக்கள் அரபுக் கல்லூரிகள் என்பன 15 .01. 2024 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும்.


02. ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் எவ்விதமான மேலதிக வகுப்புக்களும்  நடைபெற தடைவிதிக்கப்படுகின்றது.


03. வெள்ளிக்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதாயின் அஸர் தொழுகைக்கு பிற்பாடே நேரசுசிகள் வழங்கப்பட வேண்டும்.


04. பெற்றோருடைய அவதானிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் இயங்குகின்ற மேலதிக வகுப்புகள் தவிர ஏனைய மேலதிக வகுப்புகளை மாலை 06.00 மணிக்கு முன்னர் முடிவுறுத்த வேண்டும்.


05. தனியார் கல்வி நிறுவனங்களினதும் முழு நேர அரபுக் கல்லூரிகள், பகுதி நேர அல்குர்ஆன்  மதரஸாக்கள், ஏனைய குர்ஆன் மதரஸாக்களின் உணவு, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதுடன் அது தொடர்பாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அவதானிக்கப்படும்.


06. அகதியா பாடசாலைகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்வதுடன் இந்த ஊரில் இயங்குகின்ற 7 அகதியா பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகளில் எதிர்காலத்தில் அதனை ஆரம்பிப்பதற்கும் பதிவுசெய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


07.மேற்குறித்த தீர்மானங்களின்  வெற்றி தோல்வி பெற்றோரினது கைகளிலும் தங்கியிருப்பதனால் இது குறித்து பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளினூடாக பெற்றோருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

Tags

ads