நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையினை தூண்டிய இருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் தொடரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வேட்டையில் தொடர்ச்சியாக பலர் சிக்கும் நிலையில் இவ்விருவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் இருவர், தற்பொழுது மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தான் எடுத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் இந்த போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும், 24 மணி நேரமும் தமது பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் மற்றும் சீருடைகளில் இவர்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை கடந்த வாரம் ஐஸ் போதை பொருள் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த கும்பலயும் தாங்கள் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தொடர்ந்தும் போதைப்பொருளுக்கு எதிரான தமது வேட்டை தொடரும் என்றும் குறிப்பிட்டார்.