சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் அயராத முயற்சியின் பலனாக 800 மில்லியன் செலவில் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலையின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த காலத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகளை துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப்பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P.G மஹிபால அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதோடு, குறித்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இக் கள விஜயத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைகளில் அத்தியட்சகர்களையும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.