அறுகம்குடா தாக்குதல் திட்டம் தீவிரவாதமில்லை திட்டமிடப்பட்ட குற்றச்செயல் அமெரிக்காவிற்கு அரசாங்கம் தெரிவிப்பு
அறுகம் குடாவில் தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டமையின் பின்னணியில் தீவிரவாதமில்லை அது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் என அரசாங்கம் அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்தவேளை அரசாங்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத்துயாங்கொந்த, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தித்தனர் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அறுகம்குடா தாக்குதல் தொடர்பில் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டமை உட்பட பல விடயங்கள் குறித்து அரசாங்க அதிகாரிகள் அமெரிக்க தூதரக அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிற்கு தெளிவுபடுத்தியுள்ள அரசாங்க அதிகாரிகள்; தனிநபர் குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டது இதன் பின்னணியில் எந்தவித தீவிரவாதமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அறுகம்குடா குறித்து அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இலங்கை அரசாங்க தரப்பினர் இந்த சதிதிட்டமிடலின் பின்னணியில் தீவிரவாதம் இல்லை என்பதால் இந்த பயண எச்சரிக்கை அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறாததால் பயண எச்சரிக்கையை நீக்கவேண்டும் என இலங்கை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.