கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) இடையிலான கலந்துரையாடல் நேற்று (20) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் கடந்த 18 ஆம் திகதி தூதுவரை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்த ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று, கீய் சென்ஹோங் கிழக்கு மாகாணத்தை விஜயம் செய்தார்.
கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக புதிய அரசாங்கமும், கிழக்கு மாகாண ஆளுநரும் கடுமையாக உழைப்பார்கள் என்ற தமது நம்பிக்கையை சீன தூதுவர் தெரிவித்தார். இதற்கான தேவையான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை ஹிங்குரான சீனி தொழிற்சாலைக்கு சீன அரசாங்கம் ஏற்கனவே தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளதையும், சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த உள்ள திட்டங்கள் இருந்ததையும் தூதுவர் குறிப்பிட்டார்.
சீன தூதுவரின் வருகைக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தின் பல்லின ஒற்றுமையும், அதன் வளமையும் மாகாணத்தின் பலம் எனத் தெரிவித்தார். மாகாணத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களுக்கு சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 8 மில்லியன் நன்கொடை வழங்கிய சீன தூதுவர், மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தார்.
நிகழ்வு நினைவுச்சின்னங்கள் பரிமாற்றத்துடன் நிறைவுற்றது.
@CM