Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இந்தியாவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!


சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந்த தகவலை கர்நாடக மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ள நிலையில், குழந்தையின் தொற்று பாதிப்பு தொடர்பான விவரங்கள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளான நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களை தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக சீனாவின் முக்கிய நகரங்களில் வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் தகன மேடைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வேகமாக பரவி வரும் எச்.எம்.பி.வி என்ற வைரஸ் தொற்றை மனித மெட்டா நியூமோவைரஸ் (எச். எம். பி. வி) என்று அழைக்கின்றனர்.


HMPV எவ்வாறு பரவுகிறது?


இந்நோய் பாதித்தவர்களுக்கு முதலில் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் தோன்றும். பின்னர் அந்த ஜலதோஷ தொற்று காற்றில் பரவில் வைரஸ் தொற்றாக பரவும். பெரும்பாலும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. நிமோனியா, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு எளிதில் தொற்றும். நாள்பட்ட நுரையீரல் நோய் பாதித்தவர்களுக்கும் உடனடி பாதிப்பை ஏற்படுத்தும். மனித மெட்டா நியூமோவைரஸ் என்ற நோய் கிருமியானது ஆர்எஸ்வி, தட்டம்மை மற்றும் புட்டாளம்மை ஆகியவற்றை உருவாக்கும் வைரஸ்களின் கூட்டு குழுவின் ஒரு பகுதியாகும்.


HMPV வைரஸ் தொற்றின் அறிகுறிகள்


இந்நோயினால் மூச்சுத் திணறல் (டிஸ்பெனியா), மூக்கு சளி ஒழுகுதல், தொடர் இருமல் ஏற்படும். இந்த வைரஸ் தொற்றானது நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களைத் தொடுவதன் மூலமாகவோ பரவுகிறது. உதாரணமாக, இருமல், தும்மல், கைகுலுக்குதல் அல்லது கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மனிதர்களை தாக்கும் மெட்டா நியூமோவைரஸுக்கு தற்போதைக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவற்றை திறம்பட நிர்வகிக்க சில வழிகள் உள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புக்கு நேரடியாக வழங்கப்படும் திரவங்கள் (IV), ஆக்ஸிஜன் சிகிச்சை, கார்டிகோஸ்டீராய்டுகள், ஸ்டெராய்டுகள் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும் என்கின்றனர்.


@CM

Tags

ads