வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயற்பாட்டில் பொது நிர்வாக அமைச்சகமும் ஈடுபட்டுள்ளது என்றும், இலக்கை விரைவாக அடைவதற்கு தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கும், அதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும் பொது நிர்வாக அமைச்சினால் விசேட குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்குத் தேவையான சட்ட நடைமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
@CM
