'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நிதி அமைச்சில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பணிகளை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையைப் பேணவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகுதியான பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற நீண்டகால நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தற்போதைய பிரச்சினைகளுக்குக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை இனங்காண்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்த திட்டத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புதல், கிராம உத்தியோகத்தர்களை முழுமையாகச் செயலில் ஈடுபடுத்துதல் மற்றும் கொடுப்பனவு முறையிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
@CM
