Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தா? : எரிபொருள் நெருக்கடி குறித்து தொழில் அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

 


நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது வரை வேலைவாய்ப்பு இழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


இருப்பினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அமைச்சு ஆயத்தமாகி வருகின்றது.


எரிபொருள் நெருக்கடியினால் தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தேசிய தொழில் ஆலோசனைச் சபையில் ஏற்கனவே விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


தற்போதுவரை வேலை இழப்புகள் பதிவாகவில்லை என்றாலும், முதலாளிகள் மற்றும் ஊழியர் தரப்புடன் இணைந்து எதிர்கால நிலைமைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.


மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையிலும் எரிபொருள் தொடர்பான சவால்களைத் தோற்றுவித்துள்ளன.


எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு சில மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.


சுமார் 374,000 தொழிலாளர்கள் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாதத்திற்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


நெற்பயிர்ச் செய்கை நிலங்களில் 23 சதவீதமானவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


தேயிலை உற்பத்தி சுமார் 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதில் மொத்த உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எரிபொருள் நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என இருமுனைச் சவால்களை எதிர்கொண்டுள்ள தொழிலாளர் துறையைப் பாதுகாப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது.


@CM

Tags

ads