நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மத்திய, சபரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
* வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும்.
* மின்னல் தாக்கத்தின் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் ஏனைய மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மரங்கள் அல்லது மின்கம்பங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்.
இதேவேளை, அவசர காலங்களில் பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
@CM
