Type Here to Get Search Results !
Developed by Cleverbit

18 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்க தீர்மானம் - நாளை முதல் அமுலுக்கு!


லங்கா சதொச ஊடாக 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், சர்வதேச சந்தையில் பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், உள்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் 18 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, புறக்கோட்டை மொத்த சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் வழங்குவதற்குத் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ள 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களுள் பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டப்பயறு , கடலை, பாசிப்பயறு, நிலக்கடலை, கோதுமை மா, சிவப்பு அரிசி , சிவப்பு நாடு அரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாடு அரிசி மற்றும் பொன்னி சம்பா அரிசி ஆகியன உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கப் பொறிமுறையை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் முகமாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட பணிப்பாளர் சபையும் உயர்மட்ட நிர்வாகமும் விசேட கவனம் செலுத்தி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@CM

Tags

ads