அடுத்த 2030 ஆம் ஆண்டிற்குள் தற்போதைய 'அஸ்வெசும' பயனாளிகள் அனைவரையும் வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"2030 ஆம் ஆண்டிற்குள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை முழுமையாக நிறுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்த திட்டம் முடிவுக்கு வருவதனால் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்துவிட்டதாக அர்த்தமாகாது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னரும் ஏழை மக்கள் இருக்கக்கூடும் என்பதால் தான், அவர்களுக்காக வாழ்வாதார வலுவூட்டல் திட்டங்களை நாம் தற்போது முன்னெடுத்து வருகிறோம்.
வெறும் பண உதவி வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலமாக இந்த மக்களை 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதே எமது முதன்மை நோக்கமாகும்" என பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
நலன்புரி நன்மைகள் சபையானது தற்போது அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கு தயாராகி வருகிறது.
இதன் கீழ் ஏழைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நலன்புரித் திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 1.6 மில்லியன் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
@CM
