இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், உலக அமைப்பு மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' ஆகியவற்றுடன் இணைந்து நான்கு நாள் செயலமர்வு ஒன்றைக் கட்டுநாயக்கவில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சக பெரேரா, வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவளிப்போர் குறித்த முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
வீதிகளில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அந்த நாய்களின் முழுப் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு முறையாகப் பராமரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
1973இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால், அந்த காலத்தில் 370ஆக இருந்த வருடாந்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த 14 மரணங்கள் கூட அதிகம் என்பதால், நோய்த்தொற்றின் அடிப்படை ஊற்றையே கட்டுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஷர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாய்களுக்கே தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் இந்த நோயைச் சுமையின்றி ஒழிக்க முடியும் என்றார்.
எனவே, மனிதர்களுக்கு நோய் வராமல் தடுப்பதை விட, விலங்குகளிடமே நோயைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை விஷர் நாய்க்கடி அற்ற நாடாக மாற்றுவதே தங்களின் இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.
@CM
