நீண்டகாலமாகச் செலுத்தப்படாதுள்ள நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட வேலைத்திட்டம் ஒன்றினைத் திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் 'நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான அனைத்துப் பகுதிகளும், மஹரகம மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது
தங்கள் நீர் விநியோகம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை உறுதி செய்துகொள்ளுமாறு, நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய நுகர்வோரிடம் நீர் வழங்கல் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களை முழுமையாகச் செலுத்திவிடுமாறு நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறும் நுகர்வோரின் நீர் விநியோகம், சட்டத்திற்கமைவாகத் துண்டிக்கப்படும் என்று சபை எச்சரித்துள்ளது.
எனவே, நுகர்வோர் அனைவரும் இந்தத் துண்டிப்பு நடவடிக்கையைத் தவிர்த்து, ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
@CM
