மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர் விநியோகத் தடை: நீர்வழங்கல் சபை அறிவிப்பு!
எல் நினோ காலநிலையால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் தினமும் நான்கு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தினமும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாகவும், இதனால் தொடர்ச்சியாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே, நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10 அடியாகக் குறைந்துள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM
