2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த விதத்திலும் கசியவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிந்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை எனச் சுட்டிக்காட்டியுள்ளதோடு , இவ்வாறான வதந்திகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை எனவும் அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களால் பதற்றமடையாமல், நாளை (14) நடைபெறும் பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அறிவித்துள்ளதோடு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அனைத்து பரீட்சை மையங்களிலும் பரீட்சைகள் இடம்பெறும் என்பதையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்குரிய அட்டவணைப்படி குறித்த பரீட்சை மையங்களுக்குச் சமுகமளித்து பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெற்று வரும் இந்தப் பரீட்சைக்கு, 3,72,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
@CM
