தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025–2030ஐ நடைமுறைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரச நிறுவனங்களிலும் டிஜிட்டல் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025–2030க்கு 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, துறைசார் டிஜிட்டல் அபிவிருத்திப் பணிகளை நிர்வகிப்பதற்கும், தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு முயற்சிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், அரச நிறுவனங்களில் வலுவான நிறுவனப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் அபிவிருத்திப் பணிகளை முறையாக முன்னெடுத்து ஒருங்கிணைப்பதற்காக, தனியான ‘டிஜிட்டல் அபிவிருத்தி அலகு’ ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த அலகுகளை நிறுவி செயற்படுத்துவதற்கான கட்டமைப்பை உள்ளடக்கிய பணிச்சட்டம் (Reference Framework), GovTech Sri Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பப் புத்தாக்கம், தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒத்துழைப்பு, இணையவழிப் பாதுகாப்பு, இடைச்செயற்பாடு மற்றும் ஆலோசனை உள்ளிட்ட துறைகளில் GovTech Sri Lanka நிறுவனத்தின் நிபுணத்துவத்தை அரச நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அரச நிறுவனங்களில் டிஜிட்டல் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவதற்காக டிஜிட்டல் அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
@CM
