சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தப் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.06 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் சுமார் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலைகள் இந்த மாத இறுதியில் மீண்டும் திருத்தப்பட உள்ளன.
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை மட்டுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
@CM
