- ஜபறுல்லா சாஹிப்
நிந்தவூர்-15ம் பிரிவு, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, சட்ட இளமானி வை.எல். எஹ்யா அவர்கள் அல்-ஹாஜ் யூசுப் லெப்பை (எச்.எம்) மற்றும் ஹாஜியானி சுஹரா ஆகியோரின் புதல்வராவார்.
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலை, கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மற்றும் குருத்தலாவ செந்தோமஸ் கல்லூரி போன்றவற்றின் பழைய மாணவரான எஹ்யா அவர்கள் வணிக நிருவாகத் துறை சிறப்பு (BBA Hons) பட்டதாரியாவார். இவர் வணிக நிருவாகத்துறையில் முதுநிலை (MBA) பட்டத்தினையும் அதில் இஸ்லாமிய நிதியியலில் விசேட தரத்தினையும் பெற்று தற்போது அதே இஸ்லாமிய நிதியியல் துறையில் முனைவர் (PHd) பட்டம் பெறுவதற்கு முனைந்து வருகிறார்.
சிலிங்கோ இன்சூரன்ஸ் மற்றும் செலான் வங்கி போன்றவற்றில் பணியாற்றிய இவர் அமானா வங்கியின் கல்முனைக் கிளையின் முகாமையாளராகவும் கடமை புரிந்தார். முன்னர் துபாய் எமிரேட் இஸ்லாமிய வங்கியிலும் தற்போது டோஹா வங்கியிலும் உதவி முகாமையாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
விளையாட்டுத் துறை, சமுக சேவைத் துறைகளில் அதிக ஈடுபாடுள்ள இவர் நிந்தவூர் நலன்புரிச் சபை (NWC) கத்தார் கிளையின் முன்னாள் தலைவராகவும் நிந்தவூர் றொட்ராக்ட் சங்கம் மற்றும் நிந்தவூர் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (Nintavur Expatriates Society International - NESI) அமைப்பின் கத்தார் கிளையின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். அத்தோடு, கடந்த வருடம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற 'தேசிய சமாதான மகாநாடு - 2022' இல் தேச அபிமானி விருதினையும் பெற்றிருந்தார்.
எஹ்யா அவர்கள், சட்டத்துறை மற்றும் இஸ்லாமிய நிதியியல் துறை உட்பட அனைத்து துறைகளிலும் மேலோங்க வாழ்த்துகிறேன்.