நிந்தவூரினைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் மீராலெவ்வை றபீக் 37வருட பொலிஸ் சேவையினை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.
11-01-2025-சனிக் கிழமை-
நிந்தவூர் 19ம் பிரிவைச் சேர்ந்தவரும், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும்,பிரதான பொலிஸ் பரிசோதகருமான மீராலெவ்வை றபீக் அவர்கள் 37வருட பொலிஸ் சேவை யிலிருந்து 12.01.2025ந் திகதி தனது 60வயதை பூர்த்திசெய்த நிலையில் ஓய்வுபெறுகிறார்.
அன்னார் ஓய்வுபெறுவதனை முன்னிட்டு பல பிரியாவிடை வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.இன்று மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலையமும், வர்த்தக சங்கத்தினரும் அவருக்கு சிறப்பான முறையில் பிரியாவிடை வைபவத்தை நடத்துகின்றனர்.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரும், சட்ட முதுமானியுமான கலாநிதி அஜித் ரோஹன பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார். அத்துடன் இன்றிரவு கல்முனை பொலிஸ் பிரிவினர் றபீக் அவர்களுக்கு பிரியாவிடை வைபவத்தை அம்பாறையில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளின் விடுதியில் ஒழுங்கு செய்துள்ளனர். இந்நிகழ்வுகளுக்கு அவரின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதான பொலிஸ் பரிசோதகரான எம். எல். றபீக் அவர்கள் 1988ம் வருடம் பொலிஸ் திணைக்களத்தில் உதவி பொலிஸ் உத்தியோகத்தராக சேவையில் இணைந்துகொண்டார். அம்பாறை, கட்டான போன்ற பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் 1994ம் வருடம் நடைபெற்ற பொலிஸ் பரிசோதகர் (I.P) பதவியுயர்வுப் பரீட்சையில் சித்தியடைந்து களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்து பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வைப் பெற்றுக்கொண்டார்.
2010ம் வருடம் பிரதான பொலிஸ் பரிசோதகராக (Chief Inspector of Police) பதவியுயர்வு பெற்றார். இதன்மூலம் நிந்தவூரின் முதலாவது பிரதான பொலிஸ் பரிசோதகர் என்ற புகழையும் தட்டிக்கொண்டார்.
றபீக் அவர்கள் தனது 37 வருட பொலிஸ் துறை பதவிக் காலத்தில் களனி, கொள்ளுப்பிட்டி, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மத்தியமுகாம், கொழும்பு பொலிஸ் தலைமையகம், மொனராகல, சியம்பலாந்துவ, மட்டக்களப்பு, ஏறாவூர் போன்ற பொலிஸ் பிரிவுகளிலும், தென்கிழக்கு பல்கலைக்கழக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். இதன்மூலம் நாட்டின் மூவினங்களினதும் நன்மதிப்பைப் பெற்று நேர்மையான பொலிஸ் அதிகாரியாக பலராலும் பாராட்டப்பட்டார்.
மீராலெவ்வை றபீக் அவர்கள் தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதியின் மனிதாபிமான சேவைப் பதக்கம், பூர்ணபூமி சேவைப் பதக்கம், போன்றவற்றையும் பொலிஸ் மாஅதிபரின் விசேட சேவைப் பதக்கம், நீண்டகால சேவைப் பதக்கம், 125 ஆண்டுகள் நிறைவு பொலிஸ் நினைவுப் பதக்கம், 50ஆண்டுகள் நிறைவு பொலிஸ் நினைவுப் பதக்கம், முதலுதவிப் பதக்கம் மற்றும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்.
தனது சேவைக் காலத்தில் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் அஷ்றப் அவர்களினதும், அமைச்சராகவிருந்த அஷ்றப் அவர்களின் பாரியார் பேரியல் அஷ்றப் அவர்களினதும் மெய்ப்பாதுகாப்பாளராக பணியாற்றியதை பெருமையுடன் நினைவுகூர்வதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
சிறந்த சமுகசேவையாளரும், அகில இலங்கை சமாதான நீதவானுமான இவர் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயலின் இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினராகவும், நிந்தவூர் அல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவராகவும், அல் அஷ்றக் தேசிய பாடசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும், நிந்தவூர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினராகவும், நிந்தவூரிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களின் தலைவராகவும், நிந்தவூர் Kent விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் சிறந்த பாதுகாப்புத்துறை அதிகாரியாக நேர்மையுடன் செயற்பட்டு பொலிஸ் தலைமையகத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஓய்வுபெறும் எம். எல். றபீக் அவர்களின் ஓய்வுகாலம் சிறப்பாக அமையவேண்டும் என சிடிசன் மீடியா ஊடகவலையமைப்பு அமைப்பின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
@CM