இலங்கையில் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமையில் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.
அண்மைக்காலமாக சுமார் 20 இலட்சம் பேர் புதிதாக இந்த முறைமையில் இணைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
QR முறைமையில் பதிவு செய்வதில் காணப்பட்ட அனைத்துத் தொழில்நுட்பக் குறைபாடுகளும் தற்போது முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் QR குறியீடுகளைத் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சட்டவிரோதமாக எரிபொருளைச் சேமித்து வைத்திருப்பவர்கள் குறித்துப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அத்தகையோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை இயன்றவரை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
@CM
