Type Here to Get Search Results !
Developed by Cleverbit

எதற்கெடுத்தாலும் AI ஐ நம்பியிருப்பதால் கேள்வி கேட்கும் திறனை இழக்கும் மனிதர்கள்!


கேள்விகளுக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் உடனடியாகப் பதில்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் அசுர வளர்ச்சி, மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்யலாம் என லண்டனின் புகழ்பெற்ற கிரீன்விச் ரோயல் அவதானிப்பு நிலையம் (Royal Observatory Greenwich) எச்சரித்துள்ளது.


வானியல் ஆராய்ச்சித் துறையில் உலகப் புகழ்பெற்றதும், பிரித்தானியாவின் மிகப்பழமையான அறிவியல் நிறுவனங்களில் ஒன்றுமான இந்த அவதானிப்பு நிலையத்தை மேற்பார்வை செய்யும் 'ரோயல் மியூசியம்கள் கிரீன்விச்' குழுமத்தின் பணிப்பாளர் பேடி ராட்ஜர்ஸ் இது குறித்துப் பேசுகையில்; மனிதர்களின் தேடல், ஆர்வம் மற்றும் அறிவின் ஆற்றலை வரலாறு நிரூபித்துள்ளதாகவும், எனவே ஏஐ தொழில்நுட்பங்கள் மீது "முழுமையான சார்புநிலை" ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


"உடனடிப் பதில்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் ஒரு சூழல், அறிவாற்றல், நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக விளங்கும் 'கேள்வி கேட்கும் மற்றும் மதிப்பிடும்' மனிதப் பழக்கவழக்கங்களை அழித்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது," என பேடி ராட்ஜர்ஸ் எச்சரித்துள்ளார்.


கடந்த 350 ஆண்டுகால வானியல் கண்டுபிடிப்புகள் குறித்துப் பேசிய அவர், ஆரம்பகால வானியலாளர்கள் விண்வெளி குறித்து சேகரித்த பிரம்மாண்ட தரவுகள், அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திராத பல விடயங்களுக்குப் பிற்காலத்தில் உதவின என்று குறிப்பிட்டார்.


ஒரு இயந்திரம் ஒருபோதும் செய்ய முனையாத, "தேவையற்றது" என்று கருதத்தக்க நுணுக்கமான வேலைகளை அன்று மனிதர்கள் செய்ததாலேயே, அவர்கள் எழுதி வைத்த 150 ஆண்டுகளுக்குப் பிறகும் பூமியின் கடல் வழிப் போக்குவரத்துக்கு உதவும் ஒரு மாபெரும் வளமாக அத்தரவுகள் மாறின என்று அவர் பிபிசி ஊடகத்திற்குத் தெரிவித்தார்.


கூகுள் போன்ற தேடுபொறிகளில் விக்கிப்பீடியா போன்ற தளங்கள் மூல ஆதாரங்களைச் சரிபார்க்கும் வாய்ப்பை வழங்கிய நிலையில், தற்போதைய ஏஐ இன் உடனடிப் பதில்கள் மனிதர்களை மூலத் தகவல்களில் இருந்து தூரமாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


லண்டன் பொருளாதாரப் பாடசாலையின் தகவல் அமைப்புகளுக்கான உதவிப் பேராசிரியர் அனுஷ்கா ஷ்மிட் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,


"தொழில்நுட்பங்கள் மீதான அதீத சார்புநிலை என்பது புதிய ஒன்றல்ல. ஆனால், மனிதர்களைப் போலவே உரையாடி, அனைத்து வேலைகளையும் செய்யும் தற்போதைய ஏஐ அமைப்புகள், மனிதர்கள் தங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதையும் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் பெருமளவு குறைத்துள்ளன.


சமகால ஆய்வுகளின்படி, இத்தகைய 'அறிவாற்றல் அவுட்சோர்சிங்' (சிந்தனையை இயந்திரங்களிடம் ஒப்படைத்தல்) காரணமாக மனிதர்களின் நினைவாற்றல், கற்கும் திறன் மற்றும் தகைமைகள் மிக வேகமாகப் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.


ஏஐ இன் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், அறிவியல் உலகில் அது ஏற்படுத்திய புரட்சிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


@CM

Tags

ads