Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சாத்தான் புழுவால் அதிர்ந்த விஞ்ஞான உலகம்; வேறு கிரகங்களிலும் உயிர்கள் இருக்குமா?


தென்னாப்பிரிக்காவின் ஆழமான தங்கச் சுரங்கங்களில், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீற்றர் கீழே உயிருடன் வாழும் வினோதமான புழு ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இந்த கண்டுபிடிப்பு உயிரினங்களின் வாழ்வாதாரம் குறித்த பழைய கோட்பாடுகளை மாற்றியமைத்துள்ளது.


பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை இடுக்குகளில் தேங்கியிருந்த நீரிலிருந்து இந்த உயிரினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இதற்கு 'ஹேலிசபலோபஸ் மெபிஸ்டோ' (Halicephalobus mephisto) என்று பெயரிடப்பட்டுள்ளது.


நிலத்தடி இருளில் வாழ்வதால் இதனை ஆராய்ச்சியாளர்கள் 'டெவில் வார்ம்' (Devil Worm) அல்லது 'சாத்தான் புழு' என்று அழைக்கின்றனர்.


இந்த உயிரினத்தின் அளவு ஒரு அரிசியை விடவும் சிறியது என கூறப்படுகிறது.


முற்றிலும் இருள் சூழ்ந்த பகுதியில் வாழ்வதால் இதற்குக் கண்கள் கிடையாது.


மேலும், அங்குள்ள பாக்டீரியாக்களை இது உணவாக உட்கொள்கின்றது.


பொதுவாக, ஆக்சிஜன் மிகக்குறைவாக உள்ள, அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் நிறைந்த பூமியின் ஆழமான பகுதிகளில் பாக்டீரியா போன்ற ஒருகல உயிரினங்கள் மாத்திரமே வாழ முடியும் என்று கருதப்பட்டது.


ஆனால், அத்தகைய கடும் சூழலில் ஒரு பல்கல உயிரினம் வாழ்வது இதுவே முதல் முறையாகும்.


2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, கடும் வெப்பம் மற்றும் அழுத்தத்தைத் தாங்கி உயிர்வாழக்கூடிய விசேட மரபணுக்கள் இப்புழுவின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக, இதிலுள்ள 'சைட்டோக்ரோம் சி ஆக்ஸிடேஸ்' எனும் புரதம், சூழலில் ஏற்படும் திடீர் வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள உதவும் 'உயிரியல் உணரியாக' தொழிற்படுகின்றது.


பூமியின் இவ்வளவு ஆழமான மற்றும் கடுமையான சூழலில் சிக்கலான உயிரினங்கள் வாழ முடியுமென்றால், இதே போன்ற சூழலைக் கொண்ட ஏனைய கிரகங்கள் அல்லது நிலவுகளிலும் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதை மீள்வரையறை செய்ய இந்த ஆய்வு வழிவகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


@CM 

Tags

ads