பழைய விலையிலேயே எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டதால் தற்போதைக்கு விலையை குறைக்க முடியாது என்று அமைச்சர் அனில் ஜயந்த கூறுவது, மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதத்தில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களை வைத்துக்கொண்டு, மார்ச் மாத ஆரம்பத்தில் போர் காரணமாக உலக சந்தையில் விலை உயர்ந்ததைக் காட்டி அரசாங்கம் உடனடியாக இங்கு விலையை உயர்த்தியது. இதன் மூலம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் திரட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியிலிருந்து உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
அத்துடன், ஹோர்முஸ் வழியும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரிலிருந்து ஒரு லீட்டர் பெட்ரோலை 225 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் டீசலை 240 ரூபாய்க்கும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இதில் பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், 'டிராஃபிகுரா' (Trafigura) நிறுவனத்திடமிருந்து ஒரு லீட்டர் டீசலுக்கு 90 ரூபாய் அதிகமாகவும், 'ஆதித்யா பிர்லா' (Aditya Birla) நிறுவனத்திற்கு ஒரு லீட்டர் டீசலுக்கு 120 ரூபாய் அதிகமாகவும் வழங்கி, அந்த நஷ்ட சுமையை மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் டொலர் இருப்பு சாதகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு டொலர் இருப்பு எதிர்மறையாக மாறியுள்ளது. இதற்கு உலக சந்தை எரிபொருள் விலை உயர்வு காரணமல்ல; மாறாக, மின் உற்பத்தி நிலையங்களில் இடம்பெற்ற நிலக்கரி ஊழல் காரணமாக, நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான எரிபொருள் வீணாக எரிக்கப்படுவதே முதன்மைக் காரணமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
2008 உலகப் பொருளாதார நெருக்கடியின் போது மசகு எண்ணெய் பீப்பாய் 147 டொலராகவும், யுக்ரைன் போரின் போது 139 டொலராகவும் உயர்ந்திருந்தது.
ஆனால், தற்போதைய மார்ச் 7 முதல் மார்ச் 20 வரையிலான இரண்டு வார காலப்பகுதியிலேயே உலக சந்தையில் அதிகபட்சமாக 112 டொலராக விலை நிலவியது.
இந்த குறுகிய கால இடைவெளியைப் பயன்படுத்தியே அரசாங்கத்துடன் தொடர்புடைய மோசடிக்காரர்கள் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து, மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
@CM
