நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி மற்றும் இணையவழி கூட்டங்கள் நடத்தப்படுவதன் காரணமாக, பிரதேச செயலகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிரதேச செயலகங்களுக்கு வருகை தரும் நிலையில், அதிகாரிகள் கூட்டங்களில் ஈடுபடுவதால் சேவைகளை உரிய முறையில் வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்ட நாளில் அதிகாரிகள் அலுவலகங்களிலிருந்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் உத்தியோகபூர்வ கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் நினைவூட்டியுள்ளது.
இந்த நிலையில், குறித்த சுற்றறிக்கையின் அடிப்படையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலும், திங்கட்கிழமைகளில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பதைத் தவிர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.
@CM
