இலங்கையில் முதன்முறையாக உந்துருளிகளுக்கு பிரத்தியேக பாதை
இலங்கையில் உந்துருளிகள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக உந்துருளிகளுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் ஹெய்லிஸ் அத்வாண்டிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த "100 for 100" தேசிய நிறுவன உந்துருளி பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்படி ஏனைய வாகனப் போக்குவரத்திலிருந்து இந்தப் பாதை தனியாகப் பிரிக்கப்படும்.
மலேசியா போன்ற நாடுகளில் உந்துருளிகள் பிரத்தியேக வீதிகள் மூலம் விபத்துக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமையை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உந்துருளிகள் பயன்பாட்டாளர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் களுவாஞ்சிக்குடி முன்னோடித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், "100 for 100" திட்டத்தின் மூலம் 100 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனமும் 100 உந்துருளியை செலுத்துபவர்களுக்கு வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கவுள்ளன.
@CM
