வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வதற்காக, களஞ்சியப்படுத்துவதற்காக அல்லது விநியோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம் மற்றும் விதத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அல்லது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் உரிய கொள்முதல் ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் பெறப்பட்ட விநியோகஸ்தர்களின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் விலை, பொருட்களின் வகை மற்றும் அளவு, அத்துடன் தொடர்புடைய தொகுதி இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சந்தை ஆய்வுகள் மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த ஆவணங்கள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதம் மற்றும் அவற்றின் கொள்முதல் தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது விற்பனை மற்றும் களஞ்சிய நடவடிக்கைகளுக்கான உரிய பற்றுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்களை முறையாகப் பேணுமாறும் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
@CM
