Type Here to Get Search Results !
Developed by Cleverbit

சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!


பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்யும் இணையவழி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் இந்த நிலைமை தொடர்பில் பயனர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், இலங்கை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சமூக ஊடகக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


குறிப்பாக, தமது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இவ்வாறு பகிர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எனவே, குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலிருந்தபடியே இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


இதேவேளை, குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறான இணையவழி மோசடிக்கு இலக்காகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது அவதானிக்கப்பட்டால், அவர்களை உளவியல் மற்றும் சமூக ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முழுமையான கவனம் செலுத்தி வருவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads