சர்க்கரை இல்லாத சுவிங்கம் மற்றும் புதினா மிட்டாய்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) என்ற இனிப்பூட்டியை அதிகளவில் உட்கொள்வோருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பேர்லினில் உள்ள Charité பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 17,710 பேரின் சுமார் 30 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது, இரத்தத்தில் சைலிட்டால் அளவு அதிகமாக இருந்தவர்களுக்கு, குறைந்த அளவு கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதய நோய் தொடர்பான அகால மரணம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு ஆண்டுகால தொடர் கண்காணிப்பில், வயது, பாலினம், புகைப்பிடித்தல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய் அபாயக் காரணிகளைக் கருத்திற்கொண்ட பின்னரும், இரத்தத்தில் அதிக சைலிட்டால் அளவு கொண்டவர்களுக்கு முக்கிய இருதய-இரத்த நாள சம்பவங்கள் ஏற்படும் அபாயம் 57 சதவீதம் அதிகமாக இருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீண்டகால கண்காணிப்பில் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதய நோய் காரணமாக உயிரிழக்கும் அபாயம் 18 சதவீதம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைலிட்டால் இயற்கையாகவே மனித உடலில் காணப்படும் ஒரு சர்க்கரை ஆல்கஹால் வகையாகும். குறைந்த கலோரி கொண்ட இனிப்பை வழங்குவதால், சர்க்கரைக்கு மாற்றாக சுவிங்கம் , மிட்டாய்கள், பானங்கள் மற்றும் வாய்வழி பராமரிப்புப் பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பல் சொத்தையை ஏற்படுத்தும் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் பல் நலனுக்கும் சைலிட்டால் சில நன்மைகளை வழங்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
எனினும், சைலிட்டாலை அதிகளவில் உட்கொள்வது இரத்தம் உறையும் தன்மையை அதிகரித்து, இரத்த உறைவு ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என முன்னைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், சைலிட்டால் மற்றும் இருதய நோய்களுக்கு இடையிலான தொடர்பை இந்த ஆய்வு சுட்டிக்காட்டினாலும், சைலிட்டால் நேரடியாக மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது நிரூபிக்கவில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, சைலிட்டால் உட்கொள்வதற்கும் இருதய நோய்களுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
@CM
