பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்வுகளிலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.
இதுதொடர்பான நிகழ்வுகளில் இத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது விளம்பரப்படுத்தப்படுவதையோ கண்டறிந்தால், அந்த நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னணிப் பாடசாலைகளை உள்ளடக்கிய பிரதான கிரிக்கெட் போட்டிகளின்போது மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் அபாயம் உள்ளதாகப் பெற்றோர்கள் தொடர்ச்சியாகக் கவலை தெரிவித்து வந்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
@CM
