Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல்; பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?


கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் பயன்படுத்துவது, பிறக்கும் பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா என்பது தொடர்பில் டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்று கவனம் ஈர்த்துள்ளது.


கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் பயன்படுத்திய பெண்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளின் கருப்பைகள் சராசரியாக 40 சதவீதம் சிறியதாகக் காணப்பட்டதாக ‘Human Reproduction Open’ மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கருப்பையின் அளவு 13 சதவீதம் குறைவாகவும், முட்டைகள் உருவாகும் கருப்பை நுண்ணறைகளின் எண்ணிக்கை 23 சதவீதம் குறைவாகவும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், எதிர்காலத்தில் கருப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பை மதிப்பிட உதவும் Anti-Müllerian Hormone (AMH) அளவும் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோப்பன்ஹேகனில் உள்ள Rigshospitalet மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மார்கிட் பிஸ்ட்ரப் ஃபிஷர் தலைமையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 685 கர்ப்பிணிப் பெண்களும், அவர்களின் 302 பெண் குழந்தைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர்.


பெண் குழந்தைகள் தங்களது வாழ்நாளில் உருவாகக்கூடிய கருப்பை நுண்ணறைகளின் பெரும்பகுதியுடன் பிறப்பதால், ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் எதிர்கால இனப்பெருக்கத் திறனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


எனினும், கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் பயன்படுத்தியதாலேயே இந்த மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை ஆய்வு உறுதிப்படுத்தவில்லை. எதிர்கால கருத்தரிப்புத் திறன் அல்லது மாதவிடாய் நிறைவடையும் வயதில் இதனால் தாக்கம் ஏற்படுமா என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் பயன்படுத்திய பெண்கள் இந்த ஆய்வு முடிவுகளைக் கண்டு அச்சமடைய வேண்டாம் என ஆய்வை முன்னெடுத்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தனிநபர் ஒருவரின் உடல்நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகளை இந்த ஆய்வின் அடிப்படையில் கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கர்ப்பிணிகளுக்கு வலி மற்றும் காய்ச்சலுக்கான முதன்மைத் தேர்வு மருந்தாக பெரசிட்டமோல் தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, தேவையான குறைந்த அளவை, குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.


இந்த புதிய ஆய்வு முடிவுகளை மிகவும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என பிரித்தானிய விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.


பெரசிட்டமோல் பயன்பாட்டுக்கும் ஆய்வில் கண்டறியப்பட்ட மாற்றங்களுக்கும் இடையே நேரடியான காரணவிளைவு தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக மற்றும் நீண்டகால ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


@CM

Tags

ads