பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் இதற்கான விரிவான திட்டங்கள் வரவிருக்கும் பாதீட்டு திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நொச்சியாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் பாடப்புத்தகங்களுக்கான VAT வரியை நீக்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன.
அத்துடன்,சுமார் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரசுத் துறையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கஹட்டகஸ்திகிலிய பகுதியில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் தனது ஸ்திரத்தன்மை குறித்த பயத்தினாலோ அல்லது அரசியல் அச்சுறுத்தல்கள் காரணமாகவோ இந்தப் பேரணிகளை நடத்தவில்லை என்றும், இந்த அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
@CM
