இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் மூலமும் அரசாங்கம் பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண விடுத்துள்ள விசேட அறிக்கையில், எரிபொருட்களின் உண்மையான சந்தை விலைக்கும் தற்போதைய விற்பனை விலைக்கும் இடையிலான பாரிய இடைவெளி குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதன்படி அரசாங்கம் ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 204 ரூபாவையும், பெற்றோலுக்கு 32 ரூபாவையும் மானியமாக வழங்குவதால் இப்பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய மின் தேவை மற்றும் உற்பத்தி நிலவரங்களைக் கருத்திற் கொண்டு, வரும் காலங்களில் மின்சார உற்பத்திக்காக டீசலைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) முறைமை குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் நட்டத்தைக் குறைக்கும் வகையில், தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய அதிகரித்த ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.
QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம், எரிபொருள் வரிசைகள் இன்றி மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் இந்த நிதிச் சுமை மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
@CM
